பாண்டியப் பேரரசு எவ்வாறு தோன்றியது என்பதைப் பார்த்துவிடுவதும் சுந்தரானந்த சித்தரை நாம் தெள்ளத் தெளிய, துணை செய்யும்.
தேவர்களின் தலைவன் இந்திரன் என்பதை அறிவோம். இந்திரன் என்றாலே வெள்ளை யானையாகிய ஐராவதமும், அவனது அற்புத ஆயுதமான வஜ்ராயுதமும்தான் அனைவர் நினைவிலும் முந்தும். தொட்டுத் தொட்டுச் சென்றால் இந்திரனுக்கு மாப்பிள்ளை முருகன் என்பதும், இவன் மகளாகிய தெய்வானையைத்தான் முருகன் மணந்தான் என்பதும் விரிவுபடும்.
ஆஞ்சனேய மூர்த்தியின் வீங்கிய தாடைக்குக் காரணமும் இந்திரன்தான். இவன் வீசி எறிந்த வஜ்ராயுதம் பட்டுத்தான் அனுமந்தராயனுக்கு அப்படியானது.
இப்படி இந்திரன் குறித்து நிறைய சிந்தித்துக்கொண்டே செல்லலாம். இவையெல்லாமே துவாபரயுகத்து விஷயங்கள்.
தேவர்குலத் தலைவனான இந்திரனுக்கு அவ்வப்போது சோதனைகள் ஏற்படுவது மிகமிக சகஜம். அப்படித்தான் ஒருமுறை குருபகவானிடம் மோத நேரிட்டு சாபத்திற்குள்ளாகும் நடுநிலை இந்திரனுக்கு ஏற்பட்டது.
சாபத்திற்கு ஒரே பரிகாரம் ‘சிவபூஜை’ என்றாகிவிட்டது. மகாதேவ அனுக்ரகம் மட்டுமே இந்திரனை கடைத்தேற்ற இயலும் என்றாகிவிட, இந்திரனும் கடுந்தவம் புரிந்தான்.
தவத்திற்கு உருகுவதில், தவசீலர்களுக்காக ஓடிவருவதில் ஈசன் என்றுமே ஒரு அவசரக்காரன். இந்திரனையும் ஓடிவந்து ஆட்கொண்டான். இந்திரன் தவம்புரிந்ததும் இறைவன் அவனை ஆட்கொண்டதும் கடம்பவனமாகிய மதுரையில் தான் நிகழ்ந்தது.
ஆட்கொண்ட இறைவன், ‘‘உன் தேவப்பேரரசு போல இம்மண்ணிலும் ஒரு மானுடப் பேரரசு விரிவடையட்டும். உனது பாண்டித்யத்தால் உருவாகப் போகும் இப்பேரரசும் பாண்டியப் பேரரசாகட்டும்’’ என்று கூறி அருளிச் செய்திட்டார்.
ஏற்பட்டது பாண்டியர் காலம்.
இந்திரனே குலசேகர பாண்டியனாக அதாவது மனிதகுலத்தைச் சேர்ந்த பாண்டித்யமுள்ள அரசனாக ஆகி மதுரைக்குள் மணலூர் எனும் இடத்தில் அரண்மனை கண்டு, கடம்பவன «க்ஷத்ரமாகிய மாமதுரையை ஆளத் தொடங்கினான். இவன் வம்சா வழியில் அடுத்து வந்தவன் மலயத்துவச பாண்டியன். அடுத்தவன், சுந்தரனார். அதற்கும் அடுத்தவன், வீரபாண்டியன். ஐந்தாவதாய் வந்தவன் உக்கிரப் பெருவழுதி. ஆறாவதாய் வந்தவன்தான் அபிஷேக பாண்டியன்.
இன்று நாம் காணும் பலநூறு சித்த புருஷர்களுக்கு வழிகோலியவன் இவன்தான் என்றால் மிகையில்லை.
அபிஷேக பாண்டியனின் காலத்திற்கு முன்வரை ரிஷிகள், முனிவர்கள், தவசிகள் என்று யோகியர்கள் பலவாறு அழைக்கப்பட்டனர்.
சித்தர்கள் என்கிற திருநாமவரிசையும் எதற்கும் கட்டுப்படாத, எதிலும் அடங்காத, எதிலும் அடக்க முடியாத ஆகமமாயும், ஆகமமற்றும், ஆத்திகச் சுடராகவும், நாத்திகமும் கொண்டவர் போலும் அன்றிலிருந்து இன்றுவரை அறிய இயலாத, புரிந்து கொள்ள முடியாத தன்மைகளுடைய சித்தர்கள் வரிசை தோன்றியதெல்லாம் இந்த அபிஷேக பாண்டியன் காலத்திற்குப் பிறகுதான்..
இறைவனால் இந்திரன் மூலம் தோற்றுவிக்கப்பட்ட பாண்டியப் பரம்பரையிலும் ஒவ்வொரு பாண்டிய மன்னனிடமும் ஒரு திருவிளையாடல் கண்டுள்ளான் அந்த ஈசன். துவாபரயுகத்தின் ஆண்டுக்கணக்கே விசித்ரமானது. இன்றைய நம்பார்வைக்கு ஆச்சரியமூட்டுவது. அதன்படி முதல் பாண்டியனான குலசேகர பாண்டியன் 1400 வருஷம் கடம்பவனத்து ராஜாவாக திகழ்ந்திருக்கிறான் அடுத்து மலையத்துவசன்.. இவன் வயிற்றுப் பெண்தான் நமக்கெல்லாம் தாயான மீனாட்சி. இறைவன், அன்னையைக் கைப்பிடிக்க வந்த சமயம் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இவன் காலத்தில்தான் நிகழ்ந்தன. அடுத்து சுந்தரபாண்டியன். இவன் காலத்தில்தான் வெள்ளியம்பலக் கூத்து நிகழ்ந்தது. குண்டோதரனுக்கு சோறு போட்டதெல்லாமும் கூட இவன் காலத்திலேதான் என்கிறது அபிதான சிந்தாமணி. ஆதாரத்திற்கு திருவிளையாடல் புராணத்தை கையில் எடுத்துக் கொள்கிறது.
திருவிளையாடல் புராண வரிசையில் அபிஷேக பாண்டியன் காலத்திலும் பல அற்புதங்கள் இறைவனால் நிகழ்த்தப்பட்டன.
அதில் முக்கியமானது முடிசூட்டிக்கொள்ள தங்கமுடியும் அதில் மாணிக்கமும் இல்லாமல் அபிஷேக பாண்டியன் தவித்தபோது அவனுக்கு மாணிக்கம் விற்றது. பின் வருணன் வற்றாது பொழிந்து உருவாக்கிய கடலை வற்றச்செய்தது, என்று ஏராளமான லீலைகள்.
அவைகளெல்லாம் இன்று அதிசயக் கதைகளாய், அளக்க இயலாதவைகளாய் மட்டுமே இருக்க, அந்த நாளில் நிகழ்த்திய ஒரு பிரதான திருவிளையாட்டுச் செயலே இன்றளவும் நாம் காணும் சித்தபுருஷர்கள் பலருக்கும் அடிநாதமாய் உள்ளது.
சித்தன் என்கிற வார்த்தை மட்டுமல்ல இந்த பூமண்டலத்தில் முதல் சித்தன் தோன்றியதும் அன்றுதான்.
முதல் சித்தனாகவே தோன்றியதும் அந்த ஈசன்தான்.
ஒன்றான அவன், உருவில் சிவசக்தி எனும் இரண்டாகி, நன்றான செம்மொழியில் மூன்றாகி, வேதங்களில் நான்காகி, பூதங்களில் ஐந்தாகி, சுவைகளில் ஆறாகி, சுரமாகிய மொழியதில் ஏழாகி, திசைகளில் எட்டாகி, ரசங்களில் ஒன்பதான அந்த ஈசன், பித்தன், பேயன், ருத்ரன், கபாலன், சடையாண்டி, பிச்சாண்டி, அகோரன், அனன்தன் என்று எண்ணற்ற பெயர்களுக்குள் பொருந்தியவன். ஆனால் அவன் சித்தனாகியது திருவிளையாடல் புராணப்படியும், பாண்டியர் மரபின்படியும் இந்திரனால் தொடங்கப்பெற்றது, அபிஷேகபாண்டியன் காலத்தில்தான்.
அவனை சித்தனாக்கியதில் அபிஷேகபாண்டியனுக்கும் ஒரு பெரும் பங்குண்டு.
காரணங்களில்லாமல் காரியங்கள் ஏது? அதிலும் சிவலீலை என்பது சிகரங்கள் கடந்தது.
நீண்ட காலப்பெருவெளியில் மனிதக்கூட்டம் வாழ்ந்து செல்லும் நாட்களில், மாறாத ஒன்றான மாற்றங்களைக் கண்டு கண்டு மாயவாழ்க்கைக்குள் உழலும்போது பெரிதானதெல்லாம் சிறிதாகவும், சிறிதானதெல்லாம் பெரிதாகவும் தெரியும் என்பது அந்த சிவத்துக்கு தெரியும்.
அப்போது, ஒரு சாரரையாவது கௌரவித்து வழிநடத்த சிலராவது வேண்டுமே?
அவர்கள் சிலர்தான் _ ஆனாலும் சீலர்கள்.
சீலர்களே சித்தர்கள்!
சரி, முதல் சித்தனாய் சிவபெருமான் மதுரையம்பதி வரவும், சித்துக்கள் புரியவும் எது காரணமாய் இருந்தது என்று பார்ப்போமா?
அபிஷேக பாண்டியன் அந்த நாளில் அடிக்கடி பொருளாதாரச் சிக்கலில் விழுந்தபடி இருந்தான். அவன் மகுடம் தரிக்க வேண்டிய வேளையில் அதில் மாணிக்கம் இல்லை. அரசர்களின் மகுடத்தில் நவரத்னக் கற்கள் மின்னித் திளைக்கும். உள்ளபடியே அவைகள் கற்கள் மாத்திரமல்ல; கோள்கள். ஒன்பது கோள்களை சிரத்தையாக சிரம்மீது தாங்கி அந்த கோள்களின் கதிர்கள் அரசனுக்குள் ஊடுருவிப்பாய்ந்து அவனுக்கு நல்லவழியைக் காட்ட வேண்டும்.
நல்ல மதி,நல்ல பதி,நல்ல நிதி,நல்ல விதி _ எனும் நான்கும் அரசர்க்கு அவசியம். ஏனென்றால், அவன் சிரித்தால் தேசமே சிரிக்கும்; அவன் அழுதாலோ தேசமே அழுமே?
குடிமக்களுக்காக அவர்களின் நலனுக்காக வாழ்கின்றவன்தானே அரசன்? எனவே. அவனிடம் நவரத்னங்களாகிய நவநிதிகள் இருந்தே தீரவேண்டும். எந்த அரசனின் கஜானா நிரம்பிவழிகிறதோ அந்த அரசனின் நாட்டில் மகிழ்வும், நலங்களும்கூட நிரம்பி வழியும். நிரம்பி வழிந்தால்தானே நலத்திட்டங்கள் தீட்ட முடியும், அதை செயல்படுத்தவும் முடியும்?
அதிலும் இயற்கை, ஊறுகள் செய்யும்போது மக்களுக்கு நிழலாக நிற்கவேண்டியது அரசனின் செயல்.
அபிஷேக பாண்டியின் காலத்திலும் இயற்கைதான் அதிகம் அவனை சோதித்தது.
இயற்கையை விட்டு சோதிக்கச் சொன்னவனும் நமது இறைவன்தான். ஒருமுறை பெய்து கெடுத்தால், மறுமுறை காய்ந்து கெடுக்கும்.
அபிஷேகபாண்டியன் இயற்கைச் சீற்றத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறான் என்று நோக்கியபடியே இருந்தான் இறைவன்.
அபிஷேக பாண்டியன், நாட்டின் குறைகளை எல்லாம் கவனித்தான். ஓரளவு சீர்செய்தான். ஆனபோதிலும் அவனுள் அற்ப மானிடப் பிறப்பாகப் போய்விட்டோமே என்று ஓர் எண்ணம். தேவருலகமே சிறந்தது. அவர்களெல்லாம் அமுதம் குடித்தவர்கள். அரம்பையர் ஆட்டம் பார்த்துக் கொண்டு அனுதினமும் போகித்திருப்பவர்கள் என்றும் ஒரு முடிவு.
இங்கே அப்படி இருக்க முடிகிறதா? ஏக்கம்!
_ இப்படி எல்லாம் விசாரத்தில் அபிஷேகப்பாண்டியன் வாழ, அவனை தெளிவிக்காது அவன் சார்ந்த சான்றோர்களும் குழம்ப, இறைவன் ஈசன் முகத்தில் மட்டும் ஒரு மாயப்புன்னகை. ‘உள்ளக் கோயிலுக்குள் இப்படியெல்லாம் குழப்பங்களா? ஊனுடம்பாகிய ஆலயம் பற்றி இவ்வளவு பயமா? உங்கள் சித்தம் தெளிவிக்க ஒரு சித்தனாகவே வந்தால்தான் உங்களுக்கு விளங்கும், என்கிற முடிவோடு கிட்டத்தட்ட இதே குழப்பங்களுடன் இருந்த ஒருவன் உள்ளுக்குள் புகுகிறது ஈசனின் ஆன்ம ஜோதி... அ